அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய வாரி செளபாக்யா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் முதல்கட்டத்தல் 110 வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் (06)நடைபெற்ற வாரி செளபாக்கியா கூட்டத்தின்போதே மேற்குறித்தவாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்கள் போன்ற நீர்ப்பாசன புனர்நிர்மாணப்பணிகள் இவற்றுள் அடங்குவதாகவும் ஜனவரி மாதம் 29 ம்திகதி நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு 05 குளங்களின் வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
விவசாயத்திற்கு அவசியமான நீரை தேக்கி வைத்து விவசாயிகளது நீர்ப்பிரச்சினையை தீர்த்து நாட்டின் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாக அமைவதாக இதன்போது திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டத்தில் ஒரு கமநல சேவைப்பிரிவில் முதல் கட்டத்தில் 05 குளங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இதற்காக தெரிவு செய்யப்படும் குளங்கள் கடந்த 05 வருடங்களில் புனர்நிர்மாணம் செய்யப்படாததாக இருப்பது முக்கியமானதாக இருக்கவேண்டும் என்று இதன்போது திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
இருப்பினும் அவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு குளத்தின் பிரதான வேலைத்திட்டம் இல்லாத உப வேலைத்திட்டங்கள் இதற்கு அவசியம் என கருதப்படும் இடத்து உள்வாங்கப்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி ஆணையாளர் , திணைக்கள தலைவர்கள் , அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலைக்கு 110 புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பம்
bytrinco mirrer
-
0